#IPL2021 ஆடியது வரைக்கும்தான் ஊதியம்.. ஆடாதத்துக்கு இல்ல..! பிசிசிஐ அதிரடி
ஐபிஎல் 14வது சீசனில் 2வது பாதியில் ஆடாத வெளிநாட்டு வீரர்களுக்கு, அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் பாதி ஊதியம் தான் வழங்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எஞ்சிய 31 போட்டிகளை, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்கவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கிரிக்கெட் தொடர்களில் ஆடுகின்றன. டி20 உலக கோப்பையும் நடக்கவுள்ளதால், தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால், சில நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
ஏற்கனவே பாட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டோம் என்பதை உறுதி செய்துவிட்டனர். வெளிநாட்டு வீரர்களில் யார் யார் ஐபிஎல் 2ம் பாதி போட்டிகளில் ஆடுவார்கள் என்பது குறித்து பிசிசிஐ, வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதபட்சத்தில், அவர்களுக்கு ஆடியவரைக்கான பாதி ஊதியம் தான் வழங்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்மின்ஸின் ஐபிஎல் ஊதிய ஒப்பந்தம் ரூ.15.5 கோடி. கம்மின்ஸ் எஞ்சிய போட்டிகளில் ஆடவில்லை என்றால், அவருக்கு ரூ.7.75 கோடி மட்டுமே வழங்கப்படும். இது, ஐபிஎல் மீத போட்டிகளில் ஆடாத வெளிநாட்டு வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பாக அமையும்.