இந்திய அணி இலங்கைக்கு செல்லாது..! பிசிசிஐ அதிரடி
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவில்லை. மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கடைசியாக நியூசிலாந்தில் தான் கிரிக்கெட் தொடரில் ஆடியது. அதன்பின்னர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் அந்த தொடர் ரத்து செய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் ஆடுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. வரும் 24ம் தேதி அந்த தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், அந்த தொடர் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் அந்த தொடரை நடத்தலாம் என்ற திட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இருந்தது. இலங்கை தொடருக்கு பின்னர், ஜிம்பாப்வேவிற்கு சென்று ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு திட்டமிட்ட தேதிகளில் இந்திய அணி வரமுடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும். ஆனால் அதற்காக அவசரப்படமுடியாது. அவசர கதியில் முடிவெடுத்து தொடர்களை நடத்தினால், அது கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் சீரிய முயற்சிகளை சீர்குலைத்துவிடும். எனவே இந்திய அணி இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு செல்லாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது.