#BANvsSL முஷ்ஃபிகுர் ரஹீம் அபார சதம்..! இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற வங்கதேசம்
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது வங்கதேச அணி.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 13 ரன்னுக்கும், லிட்டன் தாஸ் 26 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, சீனியர் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார்.
4ம் வரிசையில் களத்திற்கு வந்த சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, மறுமுனையில் மொசாடெக் ஹுசைன்(10), மஹ்மதுல்லா(41), அஃபிஃப் ஹுசைன்(10) என மறுமுனையில் வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் சதமடித்து அணியை கரைசேர்த்தார். 127 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ரஹீம் ஆட்டமிழந்தார். இதையடுத்து 48.1 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி.
இதையடுத்து இலக்கை விரட்டிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் எந்த வீரருமே நிலைத்து நின்று ஆடவில்லை. அதிகபட்ச ரன்னே தொடக்க வீரர் குணதிலகா அடித்த 24 ரன்கள் தான். 40 ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாக டி.எல்.எஸ் முறைப்படி 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என தொடரை வென்றது.