#RSAvsPAK பாபர் அசாமின் காட்டடி சதத்தால் 204 ரன்கள் என்ற இலக்கை 18 ஓவரில் அடித்து பாகிஸ்தான் அபார வெற்றி
பாபர் அசாமின் அதிரடி அரைசதத்தால் 204 ரன்கள் என்ற கடின இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், 3வது போட்டி இன்று செஞ்சூரியனில் நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் மற்றும் மாலனின் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அதிரடியாக ஆடிய மார்க்ரம் 31 பந்தில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு மார்க்ரமும் மாலனும் இணைந்து 10.4 ஓவரில் 108 ரன்களை குவித்து கொடுத்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜார்ஜ் லிண்டே அதிரடியாக ஆடி 11 பந்தில் 22 ரன் அடித்து அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் மாலனும் அரைசதம் அடித்தார். 40 பந்தில் 55 ரன் அடித்தார் மாலன். வாண்டெர்டசன் 20 பந்தில் 34 ரன் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.
204 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர்.
முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கியதையடுத்து, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய பாபர் அசாம் சதமடிக்க, ரிஸ்வான் அரைசதம் அடிக்க, இவர்கள் இருவருமே இலக்கை நெருங்கிவிட்டனர். வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரின் 4வது பந்தில் பாபர் அசாம் ஆட்டமிழந்தார்.
59 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 122 ரன்களை குவித்து பாபர் அசாம் ஆட்டமிழக்க, அடுத்த இரண்டே பந்தில் போட்டி முடிந்தது. பாபர் அசாம், ரிஸ்வானின் அதிரடியால் 18 ஓவர்களில் 204 ரன்கள் என்ற கடின இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
இந்த வெற்றியையடுத்து, 2-1 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.