#SLvsSA அவிஷ்கா ஃபெர்னாண்டோ அபார சதம்.. அசலங்கா அரைசதம்..! தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்க நிர்ணயித்த இலங்கை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவரில் 300 ரன்களை குவித்து 301 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கிறது.
முதல் ஒருநாள் போட்டி இன்று இலங்கையில் கொழும்பு நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒருமுனையில் நிலைத்து ஆட, மினோத் பானுகா(27), பானுகா ராஜபக்சா(0) ஆகிய இருவரும் மறுமுனையில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தார். தனஞ்செயா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சாரித் அசலங்காவும் சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு ஆடிய ஃபெர்னாண்டோ சதமடித்தார். சதமடித்த ஃபெர்னாண்டோ 118 ரன்னில் 43வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த அசலங்கா 72 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 50 ஓவரில் 300 ரன்களை குவித்த இலங்கை அணி, 301 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.