#PSL தனி ஒருவனாக காட்டடி அடித்து ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய ஆசிஃப் அலி..!
லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இஸ்லாமாபாத் அணியை, தனி ஒருவனாக அரைசதம் அடித்து ஆட்டத்தை தலைகீழாக திருப்பினார் ஆசிஃப் அலி.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணி வீரர்கள் உஸ்மான் கவாஜா(0), காலின் முன்ரோ(4), ரொஹைல் நசீர்(1), ஹுசைன் டலட்(8), ஷதாப் கான்(5) ஆகிய 5 பேரும் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இஸ்லாமாபாத் அணி.
அதன்பின்னர் ஆசிஃப் அலியும் இஃப்டிகர் அகமதுவும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்த ஆசிஃப் அலி 43 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஃப்டிகர் அகமது 49 ரன்கள் அடித்தார்.
ஆசிஃப் அலியின் அதிரடி அரைசதம் மற்றும் இஃப்டிகரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற படுமோசமான நிலையில் இருந்த இஸ்லாமாபாத் அணி, 20 ஓவர் முடிவில் 152 ரன்களை குவித்தது.
153 ரன்கள் என்பது சவாலான இலக்குதான். எனவே லாகூர் அணி வெற்றி பெற வேண்டுமென்றால் கவனமாக ஆடியாக வேண்டும்.