முடிந்தது டீல்.. அணி மாறுகிறார் அஷ்வின்
அடுத்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் அணி மாறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக இருந்துவந்த அஷ்வினை கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே தூக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி அணி அஷ்வினை பெற பேச்சுவார்த்தையும் நடத்தியது.
பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்த டீம் முடிவுக்கு வராமல் அப்படியே நின்றது. கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஆனதற்கு பிறகு, அஷ்வின் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார் என்பதை அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால், தற்போது அஷ்வினை டெல்லி அணி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான பரஸ்பர வீரர்கள் பரிமாற்ற அடிப்படையில், அஷ்வினை பெற்றுக்கொண்டு அவருக்கு பதிலாக இரண்டு இளம் வீரர்களை பஞ்சாப் அணிக்கு வழங்கவுள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. அந்த இரண்டு இளம் வீரர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
அஷ்வினை கழட்டிவிட்டு ராகுலை கேப்டனாக நியமிக்கவுள்ளது பஞ்சாப் அணி. இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஷ்வின், அடுத்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியின் கீழ் ஆடவுள்ளார்.