எங்க மகளை ஃபோட்டோ எடுக்காமல்/பகிராமல் இருந்தால் மகிழ்வோம்..! அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
தங்கள் மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று மீண்டுமொரு முறை வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுஷ்கா சர்மா.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா என்று கோலி - அனுஷ்கா தம்பதி பெயர் சூட்டியது.
பிறந்ததிலிருந்து தங்கள் மகள் வாமிகாவின் முகத்தை பொதுவெளியில் காட்டாமலேயே இருந்தனர் கோலி - அனுஷ்கா. குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்போது முன்கூட்டியே குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் - கேமராமேன்களிடம் கோரிக்கை வைத்துவிடுவார்கள். கேமராமேன்களும் அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து புகைப்படம் எடுக்காமல் தவிர்த்துவந்தார்கள்.
இதுவரை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ தங்கள் மகளின் முகத்தை காட்டாமல் இருந்துவந்தனர் கோலி - அனுஷ்கா தம்பதி. இந்நிலையில்,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது முதல் முறையாக வாமிகாவின் முகம் கேமராவில் பதிவானது.
இந்த போட்டியை அனுஷ்கா சர்மா மகளுடன் பெவிலியனில் இருந்து கண்டுகளித்தார். கோலி இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 65 ரன்கள் அடித்தார் கோலி. கோலி அரைசதம் அடித்ததும், அந்த அரைசதத்தை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாக சைகையில் தெரிவித்தார். அப்போது பெவிலியனில் அனுஷ்கா சர்மா மகளுடன் நின்றார். அப்போதுதான் வாமிகாவின் முகம் முதல் முறையாக பொதுவெளியில் காட்டப்பட்டது.
அப்படியே விராட் கோலியை உரித்து வைத்திருக்கும் அவரது மகளை முதல் முறையாக கண்ட ரசிகர்கள், அப்பா - மகளின் புகைப்படத்தை ஒப்பிட்டு ரசித்துவருகின்றனர்.
தனது மகளின் புகைப்படம் வைரலாகிவரும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அனுஷ்கா சர்மா, எங்கள் (கோலி - அனுஷ்கா சர்மா) மகளின் புகைப்படம் ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்படுவதை பார்த்தோம். கேமரா எங்களை ஃபோக்கஸ் செய்ததை நாங்கள் அறியவில்லை. எங்கள் மகளின் புகைப்படம் பொதுவெளியில் பகிரப்படுவதை விரும்பவில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனவே நாங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டதை போல, எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படம் எடுக்கப்படாமல்/பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுஷ்கா சர்மா.