ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கனி 31 பந்தில் 39 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 4ம் வரிசையில் இறங்கிய நஜிபுல்லா ஜட்ரான், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஜட்ரான், 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்களை விளாசினார். ஜட்ரானின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 183 ரன்களை குவித்து, 184 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்தது ஆஃப்கான் அணி. 

184 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராஜா அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடாததால், 5 விக்கெட்டை மட்டுமே இழந்து, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் பேட்டிங் ஆடியும் அந்த அணியால் 136 ரன்கள் மட்டுமே அடித்ததால் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஃப்கான் அணி, ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.

ஆட்டநாயகனாக நஜிபுல்லா ஜட்ரானும், தொடர் நாயகனாக கரீம் ஜனத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.