அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் 50 மற்றும் 100 ரன்களை அதிவேகமாக எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அசுர வேகத்தில் ஆடி சதம் அடித்த இந்திய வீரர் அபிஷேக் சர்மா பல புதிய சாதனைகளைப் படைத்தார்.
டி20 போட்டிகளில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சுப்மன் கில்லின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார். 250 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்த அபிஷேக், பிப்ரவரி 2023இல் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக கில் 126* ரன்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஒரு டி20 இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் (13) என்ற சாதனையையும் அபிஷேக் தன்வசமாக்கியுள்ளார். இதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் 50 மற்றும் 100 ரன்களை அதிவேகமாக எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
24 வயதான அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எல்லா திசைகளிலும் பந்தாடி தனது மூன்றாவது டி20 சதத்தை எட்டினார். 135 ரன்னில் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பும்போது, அபிஷேக் சர்மாவின் அற்புதமான ஆட்டத்திற்காக இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்தும், வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களிடமிருந்தும் பலத்த கைதட்டல் கிடைத்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இருப்பினும், அந்த முடிவு முற்றிலும் தவறானதாக மாறியது. ஏனெனில் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எந்த கருணையும் காட்டவில்லை. முதல் ஓவரில், சஞ்சு சாம்சன் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தில் 16 ரன்கள் அடித்தார். அதன் பிறகு இரண்டாவது ஓவரில் மார்க் வுட்டின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்து 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சேர்ந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிரைடன் கார்ஸின் பந்தில் திலக் வர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் சீக்கிரமே அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து அபிஷேக் சர்மாவுடன் சிவம் துபே களத்தில் இணைந்தார். துபே 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசித் தள்ளினார். ஆனால், அவரும் பிரைடன் கார்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியா (9), ரிங்கு சிங் (15) இருவரும் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடிக்கவில்லை. 16 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 202/6 என இருந்தது. அபிஷேக் சர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார். 13 சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிகேஷ், அணியின் ஸ்கோர் 237 ஐ எட்டியபோது அடில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஆட்டமிழந்த பிறகு, முகமது ஷமி (0) மற்றும் அக்சர் படேல் (15) விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி விரைவாக வீழ்த்தியது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 247/9 ரன்கள் எடுத்தது.
