#IPL2021 டீம்ல எடுத்துட்டோம் என்பதற்காக முதல் மேட்ச்சுலயே அவரை ஆடவைப்பதா..? என்ன கேகேஆர் இதெல்லாம்?
சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்பஜன் சிங்கை ஆடவைத்தது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபியும், 2வது போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 3வது போட்டியில் சன்ரைசர்ஸை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 187 ரன்கள் அடிக்க, 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி, 177 ரன்கள் அடித்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் கேகேஆர் அணி ஹர்பஜன் சிங்கை ஆடவைத்தது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். 2008ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 2017 வரை 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங்கை, 2018ல் சிஎஸ்கே அணி எடுத்தது. 2018-2020 வரை 3 சீசன்கள் சிஎஸ்கே அணியில் அங்கம் வகித்தார் ஹர்பஜன் சிங். 14வது சீசனில் அவரை சிஎஸ்கே கழட்டிவிட, அடிப்படை விலைக்கு கேகேஆர் அணி எடுத்தது.
இந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்பஜன் சிங்கை ஆடும் லெவனில் எடுத்த கேகேஆர் அணி, ஒரேயொரு ஓவர் மட்டுமே அவரை வீசவைத்தது. இந்நிலையில், ஹர்பஜன் சிங்கின் சேர்க்கை குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த சீசனின் முதல் போட்டியிலேயே ஹர்பஜன் சிங்கிற்கு ஆடும் லெவனில் கேகேஆர் அணி வாய்ப்பளித்தது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவ்வளவுக்கும், சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லை. ஆனாலும் ஹர்பஜன் சிங்கை ஆடவைத்தது எனக்கு வியப்பாக இருந்தது என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.