டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4ம் வரிசை வீரர் யார் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றிராத கேப்டன் என்ற விமர்சனத்திலிருந்து மீள, டி20 உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இருக்கிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, இந்த உலக கோப்பை மிக முக்கியம். எனவே அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஒருசில இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்பெற அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ரோஹித்தும் ராகுலும் ஓபனிங்கில் இறங்கினால், 3ம் வரிசையில் விராட், 5 மற்றும் 6ம் வரிசைகளில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆடுவார்கள். அதன்பின்னர் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இறங்குவார்கள்.

எனவே 4ம் வரிசையில் யார் என்பது தான் கேள்வி. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகக்கடினம். இருவருமே சிறந்த வீரர்கள். எனவே இருவரில் ஒருவரை இப்போதே அறிவிப்பது மிகக்கடினம். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஆடிய நல்ல அனுபவத்தை பெற்றிருப்பவர். ஐபிஎல்லில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இருப்பவர். சூர்யகுமாருக்கு இலங்கை தொடர் அருமையான வாய்ப்பு. அவரும் சிறந்த வீரர். எனவே இருவரில் ஒருவர் யார் என்பதை இப்போதே கூறுவது கடினம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது உண்மையாகவே இந்திய அணி நிர்வாகத்திற்கும் பெரும் குழப்பமாகவும் சிக்கலாகவுமே இருக்கும்.