இனிமே நீங்கலாம் சரிப்பட்டு வரமாட்டீங்க..! ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணியில் கழட்டிவிடப்பட்ட 3 வீரர்கள்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 3 முக்கியமான வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜூன் 18 முதல் 22 வரை இந்த இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், ஃபைனலுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)
ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, குல்தீப் யாதவ் ஆகியோர் எடுக்கப்படவில்லை. 3 விதமான இந்திய அணியிலும் முதன்மை வீரராக அணியில் திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, 2018 ஆசிய கோப்பையில் முதுகில் காயமடைந்த பிறகே, அவரது பணிச்சுமை மீது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை. அரிதினும் அரிதாகத்தான் பந்துவீசுகிறார்.
ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்போது பந்துவீசாததால் அவர் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. அவர் இல்லாத டெஸ்ட் அணி நன்றாக செட்டாகி, வெற்றிகளை பெற்றுவருவதால் அவருக்கான அவசியமும் இல்லாமல் போய்விட்டது.
அதேபோல இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஆரம்பக்கட்டத்தில் அணியின் முதன்மை ஓபனராக இருந்த பிரித்வி ஷா அவரது இடத்தை மயன்க் அகர்வாலிடம் இழந்தார். ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகிய மூவரும் தொடக்க வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் நான்காவது வீரராக எடுக்கப்பட்டுள்ளார். எனவே பிரித்வி ஷாவுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த குல்தீப் யாதவ், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய பேட்டிங் ஆடத்தெரிந்த தரமான ஸ்பின்னர்களிடம் தனது இடத்தை மொத்தமாக இழந்துவிட்டார்.