எத்தனை விரதங்கள் இருப்பினும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பது முன்னோர்களின் வாக்கு. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது அவர்களின் அருள்வாக்கு. இன்று கடவுள் இல்லை என சொல்வதே ஒரு ஃபேஷன் ஆகி விட்ட காலம். அதனால் விரதங்களும் வழக்கொழிந்து வருகின்றது. அதுவும் ஏகாதசி விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு தான். 

அமாவாசை விரதம், பெளர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் கூட ஏகாதசி விரதம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். இரவு பகல் பாராமல் அயராது அவர்கள் கடைந்தனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது வரலாறு. ஆதலால், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. 

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. 

புரட்டாசி மாதாந்திர ஏகாதசி அஜ ஏகாதசி என அழைக்கப்படுகிறது. அஜ ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும்.

ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்வார் என்பதே ஐதீகம். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

தர்மம் செய்தால் தான் புண்ணியமா? அப்படியெனில் ஏழைகளுக்கு எப்படி கிடைக்கும்?

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகா விஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. அவ்வப்போது குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் சரியில்லாதவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும் போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. ஏகாதசி விரதமிருந்து நமது, நமது பிள்ளைகள் பாவம் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களின் பாவம் போக்கும் சக்தி கொண்டது.

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களும் அதன் நன்மைகளும்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஜா ஏகாதசி நளை வருகிறது. தவறாமல் உபவாசம் இருந்து நாராயணனை வேண்டுங்கள். விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். புதன்கிழமையும் ஏகாதசியும் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்குரியது. எனவே இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுங்கள்.