இந்து மதத்தில் மட்டுமின்றி புத்த மதத்திலும் மிக முக்கியமான புனித நாளாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் நம்முடைய பாவங்களையும், கர்மவினைகளையும் குறைத்து, துன்பங்களில் இருந்து விடுபட வைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிலர் முழு நேரமாக விரதம் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
chitra pournami 2026 worship, chitra pournami story, things to do on chitra pournami, சித்ரா பவுர்ணமி 2026 வழிபாடு, சித்ரா பவுர்ணமி கதை, சித்ரா பவுர்ணமி அன்று செய்ய வேண்டியவை
மாதந்தோறும் பவுர்ணமி திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. சித்திரை மாத பவுர்ணமி நாளில், சந்திர பகவான் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையும் நாளையே சித்ரா பவுர்ணமியாக கொண்டாடுகிறோம். சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகவும். இது மற்ற பவுர்ணமியை போல் கிடையாது. நம்முடைய வாழ்வை புதுபித்து, தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்ட அற்புதமான நாளாகும்.
சித்ரா பவுர்ணமி வழிபாடு ஏன் முக்கியம் ?

வேத புராணங்களின் படி, யம தர்மராஜா இறந்த உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு, அவர்களுக்குரிய தீர்ப்பை வழங்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் பிரம்மாவிடம் சென்று முறையிட்டார். யம தர்மராஜாவின் இந்த கஷ்டத்தை போக்க, பிரம்ம தேவர் 10,000 ஆண்டுகள் மிக கடுமையான தியானத்தில் ஆழ்ந்தார். இந்த தியான சக்தியின் வெளிப்பாடாக பிரம்ம தேவரின் உடல் மற்றும் மனதில் இருந்து சித்ரகுப்தன் தோன்றினார். சித்ரகுப்தர் அவதரித்த நாளே சித்ரா பவுர்ணமி ஆக கருதப்படுகிறது. பிரம்மாவில் இருந்து தோன்றியவர் என்பதால் ஒவ்வொரு உயிர்களின் பாவ-புண்ணியங்களை கணக்கில் வைத்துக் கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஒருவர் இறந்த பிறகு அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து, மறுபிறவி எடுக்க வேண்டுமா அல்லது முக்தி அடைய வேண்டுமா என்பதை முடிவு செய்பவர் சித்ரகுப்தர் தான்.
சித்ரா பவுர்ணமியின் சிறப்பு :
திருவிளையாடல் புராணத்தின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன், தேவ குருவான பிரகஸ்பதியை ஒருமுறை அவமதித்தான். குருவை அவமதித்த தனது தவறை உணர்ந்த இந்திரன், அந்த பாவத்தில் இருந்து விடுபட பிரகஸ்பதியிடம் வழி கேட்டார். பூமிக்கு சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யும் படி பிரகஸ்பதி வழிகாட்டினார். அதன் படி பூமிக்கு வந்த இந்திரன், கடம்ப மரத்திற்கு அடியில் கடும் தவம் இருந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான். அதற்கு அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து நீரெடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்தான். தினமும் அந்த குளத்தில் தோன்றும் ஆயிரம் தங்க தாமரைகளால் சிவனை அர்ச்சித்து வழிபட்டான். இதனால் அவனது பாவம் தீர்ந்து, சிவனின் அருளும் கிடைத்தது. இப்படி இந்திரனின் பாவம் நீங்கிய நாள் சித்ரா பவுர்ணமி. இந்திரன் உருவாக்கிய குளம் இன்றும் மதுரையில் பொற்றாமரை குளமாக போற்றப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி 2026 :

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மே 01ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. பவுர்ணமி திதி ஏப்ரல் 30ம் தேதியன்று இரவு 09.51 மணிக்கு துவங்கி, மே 01ம் தேதி இரவு 11.07 மணி வரை உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று தான் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். புத்த மதத்தில் இந்த நாள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இது கடந்த கால பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை தரும் நாளாக கருதப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி அன்று செய்ய வேண்டியவை :
- கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட சித்ரகுப்தரையும், முருகப் பெருமானையும் மனதார வழிபட வேண்டும். - திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து வழிபடுவது சிறப்பு. - ஏழைகளுக்கு, பிராமணர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இதனால் நம்முடைய கர்ம வினை பாதியாக குறையும் என நம்பப்படுகிறது. - திருவண்ணாமலையார் கோவிலிலும், காஞ்சிபுரம் சித்ரகுப்தர் ஆலயத்திலும் சென்று வழிபடுவது சிறப்பு. - கர்மவினைகளுக்குரிய கிரகமான கேதுவை வழிபடுவதும், கேதுவிற்குரிய பரிகார பூஜைகளை செய்து வழிபடுவதும் சிறப்பு. - எந்த கிரகத்தால் நமக்கு துன்பம் ஏற்பட்டு இருந்தாலும் அவற்றில் இருந்து விடுபடுவதற்காக இந்த நாளில் நவதானியங்களை நைவேத்தியமாக படைத்து, வழிபடுவது சிறப்பு.


