Asianet News TamilAsianet News Tamil

ஏழரை நடக்குதோ இல்லையோ.. இதை செய்தா சனி பகவான் சந்தோஷமாவார்!

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி என்று சனிபகவான் பல வகைகளிலும் தொல்லை கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் ராசிக்கு எப்போதெல்லாம் ஏழரை வருகிறதோ அப்போதெல்லாம் என்ன பரிகாரம் என்று ஓடுவார்கள்.  சனிப்பெயர்ச்சியை நினைத்து, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பலரும் பயப்பட காரணமே சனி பகவான் கெடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தான். ஆனால் அதுபோன்று பயம் கொள்ளத் தேவையில்லை என்பது தான் உண்மை.
 

Afraid of Saturn transit? Here is a simple solution
Author
First Published Sep 29, 2022, 11:45 PM IST

சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா, தவறா எனக் கேட்டால், தவறு என்றே சொல்லவேண்டும்.  சனிபகவான் ஜாதகத்தில் எங்கு நின்றாலும், அந்த இடத்தை  பாவத்தைத் தூய்மைப்படுத்தவே நிலைபெறுகிறாரே தவிர, நாம் நினைப்பது போல் நம்மைச் சோதிப்பதற்கு கிடையாது. ஒரு தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ‘ஹாலிடே பீரியட்’ என்று ஒன்று இருக்கும். அதாவது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றுக்கு ஒய்வு கொடுத்து, சரி செய்த பிறகு மீண்டும் இயக்குவார்கள்.  அதைப்போலத் தான் நம் மனித உடம்பும், அதைச் சரி செய்வதே சனீஸ்வரன் தான்.

யாருக்கு சர்ப்ப தோஷம் தாக்கும்.. அதற்கான பரிகாரங்கள் என்ன?

சனிபகவானுக்கு சுபத்தன்மை உண்டா, இல்லையா எனக் கேட்டால்,  நிச்சயமாக உண்டு.  சூரியனின் புதல்வனான அவர் தன் தந்தையின் குணத்துக்கு எதிராக, எப்படிச் செயல்படுவார்! வானியல் ஆய்வுகளின்படி சூரியனில் இருப்பது, ஹைட்ரஜன் வாயு. சனியில் இருப்பதும் இதே தான். ஆனால், சற்றுக் குறைவு. அத்துடன் ஹீலியம் வாயுவும் உண்டு. இவை இரண்டும்தான் ஓர் அணு உருவாகக் காரணிகள். ஆகவே தான், சனியின் தன்மை  செயல்களுக்கான (கர்மா) காரணியாக இருந்து கர்மகாரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல், ஒரு செயலும் நடைபெறாது.

அவரவர்களின் கர்ம வினைகளுக்கேற்பத்தான் பலன்களைத் தருவார், செய்வார். சனி, நல்லது செய்ய வேண்டும் என்றால், அதை குருவின் மூலமாகவோ அல்லது லக்ன சுபர் மூலமாகவோத்தான் செய்வார். சனீஸ்வரனுக்கு ‘வேலைக்காரன்’ என்ற பெயரும் உண்டு. ஒரு ஜாதகருக்கு வேலையை ஏற்படுத்தித் தருவதே இவர்தான்.  ஒரு ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம் பெற்றாலும் சரி, அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி, அவர் தன் நிலையில் இருந்து சற்றும் விலகாமல் அவரவர் கர்ம வினைக்கேற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார்.

எங்கே நிம்மதி.. அரசனுக்கு புரிய வைத்த பிச்சைக்காரன்!

கோள் சார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்துக்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால், பாதகப் பலன்கள் குறைவாகத்தான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம்.

அதனால் சனிபகவானுக்கு பொதுவான பரிகாரமாக  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது.  தன்னை விட பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது,  தினம் 108 முறை சனீஸ்வரன் காயத்திரி மந்திரம் ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது. வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது, குரங்குகளுக்கு வாழைப் பழம் வாங்கி தருவது ஆகியவை சனிபகவானைக் குளிரச்செய்யும் சிறந்த பரிகாரங்கள். உங்களுக்கு ஏழரை நடக்குதோ இல்லையோ இதையெல்லாம் செய்தாலே சனிபகவான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார். 

Follow Us:
Download App:
  • android
  • ios