Asianet News TamilAsianet News Tamil

முதல்வருடன் நேருக்கு நேர் வாதம் செய்த அரசு ஊழியர்கள்; டென்ஷனான முதல்வரால் பரபரப்பு

புதுவையில் 55 மாத நிலுவை சம்பளத்தை கேட்டு, முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை ஊழியர்கள் 88 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

ration shop employees protest behind cm rangasamy in puducherry
Author
First Published Mar 20, 2023, 11:02 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் 326 நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பண்டிகை கால பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கவர்னர் கிரண்பெடி அரிசிக்கு பதிலாக, பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதன் பின்னர் ரேஷன்கடையும் முழுமையாக திறக்கப்பட வில்லை. அதே வேளையில் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதற்கிடையே கொரோனா காலத்தில் மத்திய அரசின் மூலம் வழங்கப்பட்டு வந்த அரிசி உள்ளிட்ட தானிய பொருட்கள் மட்டும் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டன. 

இருப்பினும் தங்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் கூறி வந்தனர். புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் முதல்வர் ரங்கசாமி அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி மேலாளர் கைது

இந்த நிலையில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினருடன் கோரிமேடு அப்பா வைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ஊழியர்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய படி இருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி விளையாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். 

அவரை முற்றுகையிட்ட ஊழியர்கள், நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே ரேஷன்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும், எங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

 இதனை கேட்ட முதல்வர் ரங்கசாமி, ''கடந்த 7 வருடங்களாக எங்கே சென்றீர்கள்?. நான் முதல்-அமைச்சராக வந்து 2 வருடங்கள் தான் ஆகிறது. அதற்குள் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? உங்களுக்கு வாய் ரொம்ப ஓவரா இருக்கு.... போனா போவுதுன்னு வேலை கொடுத்தா காலையிலே வீட்டிற்கு வந்து கத்துவீங்களா.... என்று டென்ஷனான முதலமைச்சர் வீட்டிற்குள் சென்று விட்டார். 

முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி தான் நடிக்க வேண்டும் - வடிவேலு விருப்பம்

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோரிமேடு போலீசார் ரேஷன் கடை ஊழியர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். 

ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் ரேஷன்கடை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தனர். 

இதில் ஆத்திரம் அடைந்த ரேஷன்கடை ஊழியர்கள் அங்கிருந்து நேராக சென்று கோரிமேடு போலீஸ் நிலையம் அருகே புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். 

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை கலந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், மறுத்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். அதைத்தொடர்ந்து 8 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios