you are saying is true then do this - senthil balaji challenge to eps
கரூர்
"அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்" என்று கூறிவரும் எடப்பாடி அரசு உண்மையிலே அம்மா வழியில் ஆட்சி நடத்தினால் மக்களைப் பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் நேற்று இரவு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு எஸ்.பி. லோகநாதன் தலைமை வகித்தார். தாரணி சரவணன் வரவேற்றார். மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஆரியூர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி பி. குமாரசாமி, கட்சி பேச்சாளர்கள் தேனிராமர், புலவர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசியது:
"தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டுவந்து மக்களைப் பாதுகாத்தார். எப்போதெல்லாம் தமிழகத்தில் டீசல் விலை உயர்த்தப்பட்டதோ அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தவர் ஜெயலலிதா.
பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் அது மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடும் என எண்ணிய அவர் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பை அரசின் நிதியைக் கொண்டு சரி செய்தார்.
ஆனால், இப்போது ஆளும் எடப்பாடி அரசு மக்களைப் பற்றி சிந்திக்காமல் மக்கள் மீதே சுமையை இறக்கி, இன்று மாணவ, மாணவிகள் போராடும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியுள்ளது.
"அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்" என்று கூறிவரும் இந்த அரசு உண்மையிலே அம்மா வழியில் ஆட்சி நடத்தினால் மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இனி எந்தத் தேர்தல் வந்தாலும் டிடிவி தினகரன்தான் ஜெயிப்பார். ஆர்கே நகர் தேர்தல் வெற்றி இனி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் கோயம்பள்ளி பாஸ்கரன், ராமலிங்கம், வழக்குரைஞர் விஜயகுமார், காதப்பாறை முன்னாள் ஊராட்சித் தலைவர் ஏ. தங்கவேல், வேங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் ஆர்.எஸ்.ராஜா நன்றித் தெரிவித்தார்.
