Writer Gnani death actor kamal mourning
எழுத்தாளர் ஞானியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் நடிகர் கமல் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநி என்கிற சங்கரன் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் ஞானி.
சமூக விமர்சன நோக்குள்ள வீதி நாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்ஷா என்ற நாடக குழுவை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும்படங்கள், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளை அனைவரும் பாராட்டும்படி செய்து வந்தார். ஞாநி இயக்கிய பெரியார் குறித்த தொலைகாட்சிப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சிறந்த அரசியல் விமர்சகராக மிகச் சிறப்பான பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்த சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். காலமான எழுத்தாளர் ஞானிக்கு பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் ஞாநியின் விருப்பப்படி அவரது உடல், சென்னை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் செய்தியினை பதிவிட்டுள்ளார். அதில், திரு.ஞானியின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது என்றும், அவர் தானத்துக்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்றும் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
