அதிமுக பல அணிகளாக உடையும்.. சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது.. தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடி சரவெடி..!
சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போதில்லை என திமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போதில்லை என திமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க.தமிழ்ச்செல்வன்;- கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக தமிழகத்தில் ஆட்சி செய்த போது மத்திய அரசால் நீட் தேர்வை 100 சதவீதம் கொண்டு வர முடியவில்லை. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு மத்திய அரசு கொண்டு வந்தது. இதை முதலில் அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆளுமை, துணிச்சல் தற்போது ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தும் முதல்வர் பழனிசாமிக்கு இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு இல்லாத தால் நீட் தேர்வு மட்டுமின்றி, தமிழகத்துக்குத் தேவையில்லாத பல திட்டங்களையும் அனுமதித்து வருகின்றனர். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தீரப் போவதில்லை. அவர்களால் சட்டமன்ற வேட்பாளர்களை கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதிமுகவில் ஒரே குடும்பத்தில் பலருக்கும் பதவி வழங்குவதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. எனவே திமுக ஆட்சி அமைப்பது முடிவாகி விட்டது. அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும், பேசிய அவர் அதிமுகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும். சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. முதலில் வெளியில் வரட்டும் அதற்குப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். திமுக தலைமை உத்தரவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தங்க.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.