உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவர்களுக்கு காட்டும் நன்றி இதுதானா..? மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பும் திமுக..!
ஒவ்வொரு மருத்துவருக்கும் ரூ.60,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.10.92 கோடி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், மினி கிளினிக் மருத்துவர்களின் ஒப்பந்தங்களை டிசம்பருக்குள் தமிழக அரசு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 1820 மருத்துவர்களின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடியடையும் நிலையில், முன்கூட்டியே ஒப்பந்தங்களை முடித்துக்கொள்ள அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தொற்றுநோயின் இரண்டாவது அலை மாநிலத்தை தாக்குவதற்கு சற்று முன்பு அதிமுக அரசால் இந்த மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். மினி கிளினிக்குகளின் சேவைகள் ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் இணைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது 1,820 மருத்துவ அலுவலர்கள் சம்பளப் பட்டியலில் உள்ளதாகவும், அவர்களது ஒப்பந்தங்கள் அனைத்தும் டிசம்பர் 4 ஆம் தேதி முடிவடையும் என சுகாதார சேவைகள் துணை இயக்குநர்கள் மருத்துவர்களிடம் பகிர்ந்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். பிப்ரவரிக்கு மேல் அவர்களின் சேவைகள் தேவையில்லை என்று ஆவணம் கூறியுள்ளது.
ஒவ்வொரு மருத்துவருக்கும் ரூ.60,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.10.92 கோடி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 1,420 பல்நோக்கு தொழிலாளர்களின் ஒப்பந்தங்களும் டிசம்பருக்குள் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பல்நோக்குத் தொழிலாளியும் மாதம் ரூ.6,000 பெறுகிறார்கள். அவர்களது ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.85.20 லட்சம் அரசுக்கு மிச்சமாகும்.
மினி கிளினிக் மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்ற இடங்களில் பணிபுரியும் சில மருத்துவர்களை நாங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். இது தவிர, மீதமுள்ளவர்களின் சேவைகள் இப்போது குறைவாகவே தேவைப்படுகின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
பெரும்பாலான மருத்துவர்கள் இரண்டாம் அலைக்கு முன் பணியமர்த்தப்பட்டனர். அதிமுக தலைமையிலான ஆட்சிக் காலத்திலும் மினி கிளினிக் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதால் அந்த மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்கள் தற்போது தடுப்பூசி போடும் பணியில் மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். "ஆட்சேர்ப்பு செய்யும் போது, அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படாது" என்று அவர் கூறினார்.
பெரும்பாலோர் இரண்டாம் அலைக்கு சற்று முன்பு வேலையைப் பெற்ற இளம் பட்டதாரிகள். சிலர் முதல் அலையின் போது வேலை செய்தனர். முன்னதாக மினி கிளீனிக் விவகாரம் சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பது. அப்போது பெரும் தொற்று அதிகரித்த காலத்தில் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் நிறைந்த இடங்கள் பார்க்கும் நேரமின்மையால், கிடைத்த இடங்கள் கிளீனிக்குகள் திறக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் நம்மிடம், '’கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே செல்லத் தயங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. அரசாங்கம் சார்பாக கையுறை, முகக்கவசம் கூட வாங்கித்தரவில்லை. எங்கள் சொந்தப்பணத்தில் தான் வாங்கினோம். மக்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும்போது எங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் தெரியுமா? உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கிறது. அடுத்து மூன்றாவதாக ஓமிக்ரான் அலை வரப்போவதாக உலக சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது. அதன் தாக்கம் மிகக் கொடூரமாக இருக்கும் என்கிறார்கள். அப்போதும் எங்கள் சேவை நிச்சயம் தேவையாக இருக்கும். நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டோம். ஆனால் எங்களின் தன்னலம் கருதாத சேவை, அர்ப்பணிப்பு, எதிர்கால தேவை கருதி எங்களை பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்கிறார்கள்.