ஆட்சிமைக்க உரிமை கோரப்படுமா? அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பரபரப்பு தகவல்..!
சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு படுதோல்வியை சந்திக்கும் என எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு படுதோல்வியை சந்திக்கும் என எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் முதல்வராக நாராயணசாமி உள்ளார். முதல்வர் மீது மக்கள் விரோத போக்கு, மத்திய அரசு, ஆளுநர் மோதல், மாநில வளர்ச்சியில் அக்கறையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மாநில நலன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நாராயணசாமியின் சர்வாதிகாரமான செயலை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். தற்போது ஆளுங்கட்சியில் 12 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிக்கு 14 எம்.எல். ஏ.க்களும் உள்ளனர். எனவே மெஜாரிட்டியை இழந்த புதுச்சேரி அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு படுதோல்வியை சந்திக்கும். புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் நமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசுடனும், ஆளநருடன் இணக்கமாக செயல்பட்டிருக்க வேண்டும். வருகிற தேர்தலில் மக்கள் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியாளர்கள் தான் காரணம் என்றார். மேலும், ஆட்சியமைக்க உரிமை கோருவது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.