புத்தாண்டால் மகிழ்ச்சி வருமா.? தகுதியற்றவர்களை தேர்வு செய்யுற வரை மகிழ்ச்சி கிடைக்காது - தங்கர்பச்சான் சரவெடி!
எவ்வளவு திறமைகள் இருந்தும் பணமில்லாதவர்களைப் பார்த்து ஏளனம் பேசி, திறமையற்ற தகுதியற்ற பணம் மட்டுமே உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் மன நிலையில் மக்கள் உள்ள வரை நிலையான மகிழ்ச்சி கிட்டாது!
நேர் எதிரான புதிய அரசியல் உருவானால் மட்டுமே நம் சிக்கல்கள் தீர்ந்து நிலையான மகிழ்ச்சி நிலவும் என்று நடிகரும் இயக்குநருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினமான இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல தரப்பினரும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் ட்விட்டரில் புத்தாண்டு தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “புதிய ஆண்டு பிறந்து விட்டதால் மட்டும் சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்வு கிடைத்து விடாது! ‘இவனை எல்லாம் யார் தேர்தலில் போட்டியிட சொன்னது’ என எவ்வளவு திறமைகள் இருந்தும் பணமில்லாதவர்களைப் பார்த்து ஏளனம் பேசி, திறமையற்ற தகுதியற்ற பணம் மட்டுமே உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் மன நிலையில் மக்கள் உள்ள வரை நிலையான மகிழ்ச்சி கிட்டாது!
இதற்கு நேர் எதிரான புதிய அரசியல் உருவானால் மட்டுமே நம் சிக்கல்கள் தீர்ந்து நிலையான மகிழ்ச்சி நிலவும்!! - தங்கர்பச்சான்” என்று குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு தொடர்பாக தங்கர்பச்சான் அரசியல் ரீதியாகப் பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பணமில்லாதவர்களைப் பார்த்து ஏளனம் பேசுவது என்று எந்தக் கட்சியைக் குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோலவே திறமையற்ற, தகுதியற்ற, பணம் மட்டுமே உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் மனநிலை என்று தங்கர்பச்சான் குறிப்பிட்டிருப்பது தமிழகத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகளை குறிப்பிடுகிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இயக்குநர் தங்கர்பச்சான் ட்வீட்டரில் பதிவிட்டது பரபரப்பானது. எகிறிய மின் கட்டணம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்த தங்கர்பச்சான், திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மாதந்தோறும் மின் பயணீட்டு அளவை (மீட்டர் ரீடிங்) எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜி, தான் சொல்லாததை சொன்னதாக தங்கர்பச்சான் பதிவிட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.