கர்நாடகாவில் இருந்து காவிரிநீர் வாங்கித்தர முடியுமா? ரஜினியை சீண்டும் ராதாரவி!
தமிழகத்தில் தற்போது காலியாக இருப்பது காவிரி ஆறுதான் என்றும் ரஜினிகாந்த் முதலில் கர்நாடகவில் இருந்து காவிரியில் தண்ணீர் வாங்கி வர முடியுமா? என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில திமுக பேச்சாளர் நடிகர் ராதாரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, அமைதியாக சினிமாவில் நடித்து வந்தவர்கள், இன்று அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சொல்வது தவறு என்று கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக கூறிய ராதாரவி, வரும் தேர்தலில் அவர் மீண்டும் வருவார் என்றார். தற்போது தமிழகத்தில் காலியாக இருப்பது காவிரி ஆறுதான். முடிந்தால், கர்நாடக சென்று காவிரி தண்ணீரை ரஜினி வாங்கி வர தயாரானால், அவருடன் செல்லும் முதல் ஆளாக தான் இருப்பேன் என்று ராதாரவி கூறினார்.