வீட்டுக்கு கிளம்புற நேரத்துல விபரீத விளையாட்டு தேவையா..? எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் டிடிவி தினகரன்.!
பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோரின் பெயரில் அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரம் மறைவதற்கு சென்னை அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகியவையும் மாற்றப்பட்டிருப்பதாக அடுத்த சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.