ராமதாஸ் கேட்பதைவிட எங்களுக்கு 5 சதவிகிதம் கூட கொடுக்கணும்... களத்துக்கு வந்த கருணாஸ்..!
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், ’’அதிமுக என்பது முக்குலத்தோர் சமுதாய கட்சி என்ற அளவிற்கு இருந்து வருகிறது. வன்னியர் சமூகம் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறது. இதுபோல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பாமக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறது. பிற சமூகத்தினரை வஞ்சித்து, குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சலுகைகள் வழங்க வேண்டும் என்பது தவறானது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 ஆண்டுகள் உடனிருந்தவர் சசிகலா. 1991 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதா அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உடனிருந்துள்ளார். சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அதிமுகவில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள். அவர் வருகையால் கட்சியில் பிரச்னைகள் ஏற்படுமா? என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஒருவேளை சசிகலா அந்த கட்சிக்கு உழைத்தது உண்மையென்றால், நிச்சயமாக அவர்களை பிடித்தவர்கள் அவர்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்ய இன்னும் காலம் உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.