ஒரே கூட்டணியில் பாமக - விசிக...? 2011 சொல்லும் தேர்தல் பாடம் என்ன..?
திமுக கூட்டணியில் பாமக சாயுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பாமக - விசிக இடையே 2011-ம் ஆண்டில் நடந்த திருப்பம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் அமைந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது. அக்கூட்டணி கட்சிகள் கூட்டம் அடிக்கடி நடப்பதன் மூலம் அது உறுதியாகி உள்ளது. ஆனால், அதிமுகவில் தலைமையில் அமைந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையைப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கூட்டணி காட்சிகள் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது பாமக என்ன நிலையை எடுக்கும் என்பதுதான். திடீர் திருப்பமாக எதிரும் புதிருமாக இருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன் எந்தப் பகையும் இல்லை என்று ராமதாஸ் சொல்கிறார். திமுகவின் புதிய பொதுச்செயலாளராகியுள்ள துரைமுருகன், பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தச் சூழலில் தொல்.திருமாவளவனுடன் எந்தப் பகையும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதன் மூலம், அவர் திமுக பக்கம் சாய்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆனால், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்பது விசிகவின் திட்டவட்ட முடிவாகும். திருமாவளவனுடன் பகை இல்லை என்பது தொடர்பாக திருமாவளவன் அளித்துள்ள பேட்டியிலும், ‘ராமதாஸ் டங் ஸ்லிப் ஆகி சொல்லியிருப்பார்’ என்றே திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், கடந்த காலங்களில் எதிரும் புதிருமாக இருந்த ராமதாஸும் திருமாவளவனும் ஒரே கூட்டணியில் இடம் பெற்ற வரலாறும் உண்டு. கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே திமுகவுடன் கூட்டணியில் இருந்தது விசிக. அப்போதும் திருமாவளவனும் ராமதாஸும் எதிரும் புதிருமாகத்தான் இருந்தனர்.
ஆனால், அப்போதையை திமுக தலைவர் கருணாநிதிக்கு திருமண பத்திரிகை வைத்து அழைக்க வந்த டாக்டர் ராமதாஸுடன் கூட்டணி ஒப்பந்தத்தையும் போட்டு அனுப்பி வைத்தார் கருணாநிதி. அந்தக் கூட்டணியை திருமாவளவனும் ஏற்றுக்கொண்டார். ராமதாஸுடன் ஒரே மேடையில் ஏறி வாக்குகளையும் சேகரித்தார் திருமாவளவன். இது கடந்த கால வரலாறு. தற்போது அதேபோன்ற ஒரு சூழல்தான். தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பரில் அறிவிக்கப்போவதாக பாமக கூறிவருகிறது. ஒரு வேளை திமுக பக்கம் பாமக சாய முடிவெடுத்தால், விசிக - பாமக 2011-ல் நடந்த கதையை எடுத்துச் சொல்லி சமாளிக்கவும் திமுகவுக்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் இன்னும் 7 மாதங்களே உள்ளன. குறிப்பாக நவம்பருக்கு பிறகு தேர்தல் கூட்டணி தொடர்பான காட்சிகள் இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கட்சிகளுக்குள் திரைமறைவில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம்.