ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்கிற பதாகைகளை ஏந்தி கருப்புக்கொடி காட்டி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் முழு ஊரடங்கு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் முற்றிலும் கொரோனா தொற்றைக் குறைக்கும் விதமாக மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி ஜூன் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கடந்த கொரோனா அலையின்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்கிற பதாகைகளை ஏந்தி கருப்புக்கொடி காட்டி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் மதுக்கடைகளை திறக்க மு.க.ஸ்டாலின் அனுமதித்துள்ளதால் கடும் விமர்சனத்தை அவர் மீது முன் வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #குடிகெடுக்கும்_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கின் போது டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளித்தது ஏன்? என செய்தியாளர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கொரோனா முதல் அலையில் தொற்று உச்சத்தில் இருந்த போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து முற்றிலும் தொற்றே இல்லை என்ற நிலை உருவாக உள்ளது. எனவே தான் டாஸ்மாக் கடைகளை திறக்க வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது. இப்போது திமுக அரசை குறை சொல்பவர்கள், அப்போது எடுத்த நடவடிக்கைகள் என்ன, தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.