திமுக கொடுத்த தொல்லைகளை ‘தலைவி’ படத்தில் ஏன் காட்டல..? கேட்கிறார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.!
‘தலைவி’ படத்தில் எங்கள் கட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகள் இடம்பெறவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து‘தலைவி’ என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் வந்த சில காட்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார். ‘தலைவி’ படத்தின் முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் எப்போதுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டவர் கிடையாது. 1967-இல் ஆண்டு எம்.ஜி.ஆர். குண்டடிப் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய புகைப்படத்தை போஸ்டரில் அச்சடித்துதான் அண்ணா தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி எம்.ஜி.ஆரால் கிடைத்தது என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க அண்ணா விரும்பி எம்.ஜி.ஆரை அணுகினார். ஆனால், எம்.ஜி.ஆர் அதை மறுத்துவிட்டார்.
ஆனால் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். தனக்கு அமைச்சர் பதவி கேட்டது போன்றும் கருணாநிதி மறுப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது உண்மை கிடையாது. அதே போல எம்.ஜி.ஆர், என்றுமே ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியதில்லை. ஆனால், படத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது. எங்கள் கட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. இது போன்ற காட்சிகளை எல்லாம் படத்திலிருந்து நீக்க வேண்டும்.” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.