80% மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளனர். ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்தது அனைத்தும் கைநழுவி விட்டது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர்  பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

80% மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளனர். ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்தது அனைத்தும் கைநழுவி விட்டது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் தாக்கப்படலாம், அவமானப் படுத்தப் படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள பெங்களூரு புகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரண்டு தலைமையில் கீழ் அதிமுக செயல்பட்டு வருகிறது. இரண்டை தலைமையின் கீழ் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கட்சியை வலுப்பெற வேண்டும் என்றால் ஒற்றை தலைமையின்கீழ் அதிமுக வரவேண்டும் என்ற குரல் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சிக்குள் இருந்து வருகிறது. கூவத்தூரில் சசிகலாவின் அனுக்கிரகத்தால் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவையும் கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். இதன் முன்னோட்டமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார் அவர். தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை ஈபிஎஸ் இடம் போராடி பெற்றார். இதன் தொடர்ச்சிதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என பிளான்.

தான் பொதுச்செயலராக ஆகவேண்டும் என இதுவரையிலும் அவர் வாய் திறந்து பேச வில்லை, அவரது ஆதரவாளர்களே பேசி வருகின்றனர், இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சாணக்கியத்தனம் என விவரம் அறிந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஷிப்டு முறையில் மாறி மாறி கடந்த நான்கு தினங்களுக்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை எடப்பாடி பழனிசாமி என்னிடம் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதே இல்லை, ஆனால் திடீரென ஒற்றைத் தலைமை குறித்து பேச்சு வர காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இரட்டை தலைமை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. ஒற்றைத் தலைமைக்கு இப்போது அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே நேர்த்தில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என பேச்சுக்கள் அடிபடுகிறது. இதேவைளையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஓபிஎஸ் என் கையொப்பம் இல்லாமல் பொதுச் செயலாளர் நியமிக்க முடியாது, அப்படி மீறி நடந்தால் அதிமுக அழிவை நோக்கி செல்லும் என எச்சரித்துள்ளார். மொத்தத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்கும் நிலையில் தலைமைப் பதவியை கைப்பற்றுவதற்கான யுத்தம் தீவிரமாக இருந்துவருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள பெங்களூரு புகழேந்தி, கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டார்.

இப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே உள்ளனர், இனியாவது ஓ.பன்னீர்செல்வம் போர்க்களம் பூண வேண்டும் அவர் சசிகலாவை சந்திக்க வேண்டும், சசிகலாவும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும், அப்படி இல்லை என்றால் மொத்த அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமி இடம் போய்விடும். தன்னை நம்பி வந்தவர்களை கூட ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். இனி ஓ.பன்னீர்செல்வம் ஒன்று எடப்பாடி பழனிச்சாமியிடம் சரணடைய வேண்டும் இல்லையென்றால் எதிர்த்து போரிட வேண்டும். இது 23 தேதிக்கு பிறகு தான் தெரியும். பொதுக்குழுவில் குண்டர்களை இறக்கி ஓபிஎஸ்க்கு ஆதரவாக பேசுபவர்கள் எவராக இருந்தாலும் அவர் தாக்கப்பட கூடும், அதற்கான ஏற்பாடுகள் தயாராகவே இருக்கும். இவ்வளவு ஏன், அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கூட அவர்கள் அவமானப் படுத்தப் படலாம். இவ்வாறு பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார்.