ஆர்.கே.நகர் வெளிப்படுத்திய ஸ்லீப்பர்செல்கள்: திவாலாக்கிய தினகரன்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை முதலே கட்சியினர் குவிந்தனர்.
இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் பல கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக.,வும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலேயே தினகரன் அதிக வாக்குகள் எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுக் கொண்டிருந்தார். தினகரனுக்காக பணி செய்தவர்கள் யார், ஏஜெண்டுகள் யார் என்றெல்லாம் மற்ற கட்சியினர் போட்டி போட்டு விவாதித்துக் கொண்டிருக்கும் போது, டிடிவி தினகரன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து அதிமுக.,வினர் அலசிக் கொண்டிருக்கின்றனர்.
தினகரனை முன்னிலைப்படுத்திய முதல் சுற்று வாக்குகள் எண்ணிய பகுதி நேதாஜி நகர் பகுதியாகும். இங்கேதான், அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மாவட்டத்தினர் ஓட்டு வேட்டை நடத்தி பணியாற்றினராம். இதே பகுதியைத்தான், தினகரன் தரப்பில் தங்க தமிழ்ச்செல்வனும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு ஓட்டு வேட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.