அதிமுக மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பு... யார் இந்த ஆர்.தர்மர்? ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி!!
மாநிலங்களவை தேர்தலுக்காம அதிமுக வேட்பாளர்கள் 2 பேரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்காம அதிமுக வேட்பாளர்கள் 2 பேரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதை அடுத்து காலியிடத்தை நிறுப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதில் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர். தர்மர் என்பவர் யார் என்பது பலருக்கும் தெரியாது. தெரியாத, பிரபலமில்லாதவர்களுக்கு முக்கிய பதவி கொடுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைலாக இருந்த நிலையில் அதே ஸ்டைலை எடப்பாடி பழனிசாமி பின் தொடர்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.