எங்களை குறை சொல்பவர்கள் எல்லாரும் பதவி ஆசை பிடித்தவர்கள் - அமைச்சர் உதயகுமார் ஆவேசம்...
மதுரை
அதிமுக அரசை வீழ்த்த பதவி ஆசை பிடித்த சிலர் சதி செய்து வருகின்றனர். அவர்களே எங்களை குறை சொல்கின்றனர் என்று அமைச்சர் உதயகுமார், மதுரையில் நடந்த மனுநீதி முகாமில் பேசினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காண்டை கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமைத் தாங்கினார்.
இந்த முகாமில் எம்.எல்.ஏக்கள் ராஜன்செல்லப்பா, போஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், 31 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 186 பயனாளிகளுக்கு வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
அப்போஈது அவர் பேசியது: "அ.தி.மு.க. அரசு எப்படியாவது தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ., போஸ் பேசினார். மீதமுள்ள ஆட்சிக் காலம் முழுவதையும் நிறைவு செய்வதில் அ.தி.மு.க. அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
காவிரி டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காக்க தண்ணீர் கேட்டு, தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கர்நாடகாவிலோ, கேரளாவிலோ எந்த சொத்துகளும், நிறுவனங்களும் இல்லை. இதனால் காவிரி மற்றும் முல்லை பெரியாறில் நமது உரிமைகளை கேட்டு பெறுவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.
தமிழகத்தில் நிதி நெருக்கடி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனாலும், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் இந்த அரசை வீழ்த்த, பதவி ஆசை பிடித்த சிலர் சதி செய்து வருகின்றனர். அவர்களே எங்களை குறை சொல்கின்றனர்" என்று அவர் பேசினார்.