அனைவருக்கும் பொதுவான கோயில்களில் சாப்பிட விடாமல் விரட்டுபவர்கள் யார்.? வழிகாட்டுமா தமிழக அரசு.?
அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு உணவு அளிப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கோயில் அன்னதானத்தில் பங்கேற்போருக்கு இடமளிப்பது.
மாமல்லபுரம் கோயில் அன்னதானத்தில் புறக்கணிக்கப்பட்ட பெண்ணுடன் அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு உணவு சாப்பிட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருக்கோயில்களில் அன்னதானம் திட்டம் 2001-06 அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின்பு வந்த திமுக ஆட்சியிலும் இத்திட்டம் தொடர்ந்தது. அதை மெருகேற்றி அண்மையில் சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமாக இது உருவெடுத்துள்ளது. இதிலிருந்தே இத்திட்டத்தின் மகத்துவத்தை அறியலாம். கோயில்களில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானத் திட்டம் என்பது, கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான். ஆனால், பல கோயில்களில் பக்தர்களோடு அப்பகுதியில் உள்ள பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்கள் எனப் பலரும் அன்னதானத்தைச் சாப்பிடுவது வழக்கம்.
இப்படி சாப்பிட வருவோரை பந்தியில் உட்கார அனுமதிக்காமல் கோயில் ஊழியர்கள் விரட்டுவதும் அலைகழிப்பதும் நடந்தேறும். இதுபோன்ற காட்சிகளை கோயில்களுக்கு சென்ற பலரும் பார்த்திருக்கக்கூடும். இதுபோன்ற ஒரு சம்பவம்தான் சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்திலும் நடைபெற்றது. இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதாதன பந்தியில் உட்கார சென்ற பெண்ணை சாப்பிடக் கூடாது என்று சிலர் திருப்பி அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், மனம் வெதும்பிய அந்தப் பெண், வீடியோ ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் பேசியதிலிருந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. “நாங்களும் மனிதர்கள்தான். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புறக்கணிக்கிறார்கள்” என்று அந்தப் பெண் மன வருத்துத்துடன் பேசியிருந்தார்.
நாடோடி வாழ்க்கை வாழும் இச்சமூகத்தினர், கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி, தொழில் செய்பவர்கள். யாருக்கும் தீங்கிழைக்காத இவர்களை, கடவுள் முன் அனைவரும் சமம் என்று போதிக்கும் இடத்தில் சாப்பிட பந்தியில் அனுமதிக்காதது நிச்சயமாக துரதிர்ஷடவசமானது. ஆனால், அந்தக் கரையைப் போக்கும்விதமாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்தப் பெண்ணுடனும், அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் அமர்ந்து அதே கோயிலில் அன்னதானத்தை சாப்பிட்டது நெகிழ வைக்கும் நிகழ்வாகும்.
இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் முதல் பந்தியில் அன்னதானம் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது முதல்வரின் கவனத்துக்கு சென்றது. எனவே, அந்தப் பெண் உட்பட அனைவருடனும் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டேன், திருக்கோயில் அன்னதானம் என்பது அனைவருக்கும் பொதுவானது” என்றார். அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு உணவு அளிப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கோயில் அன்னதானத்தில் பங்கேற்போருக்கு இடமளிப்பது. இதை உணர்ந்து முதல்வரும் அமைச்சரும் நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டக்கூடிய அம்சமாகும்.
ஆனால், பல கோயில்களிலும் இப்படி விரட்டியடிப்பது சகஜமாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் எல்லா கோயில்களுக்கும் அமைச்சர் சென்றுகொண்டிருக்க முடியாது என்பதும் யதார்த்தம். இந்த விஷயத்தில் கோயில் ஊழியர்களுக்கு பின்பற்ற வேண்டிய உத்தரவுகளை அளிக்க வேண்டியதும் அரசின் கடமை. குறிப்பாக, சாப்பிட வருவோரை, ஈ, காக்காவை விரட்டுவது போல விரட்டுவோர் மீது நடவடிக்கையும் தேவை. இதுதொடர்பாக தமிழக பாஜகவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புறக்கணித்தது யார்? இந்து அறநிலையத் துறைதான் கோயில்களை நிர்வாகம் செய்கிறது என்று மார்தட்டி கொள்ளும் தமிழக அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். புறக்கணித்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறிய பாரதி வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்!