ஸ்டாலினுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த பெண்கள் யார்?: சூடேறும் தலைநகர் பஞ்சாயத்து...
என்னாச்சு தி.மு.க.வுக்கு? என அரசியல் பார்வையாளர்கள் கேட்குமளவுக்குதான் ஆர்.கே.நகரில் அக்கட்சியின் பிரச்சாரம் இருந்தது. ஏதோ ஒப்புக்கு உப்புமா சாப்பிட்டது போல! சம்பிரதாயத்துக்கு கொடி பிடித்தார்கள், கூட்டம் போட்டார்கள். பொதுவாக ஒரு கவுன்சிலர் எலெக்ஷனுக்கு கூட தொண்டை கிழிய பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் இந்த தேர்தலுக்கு ஜஸ்ட் 3 நாட்கள் மட்டுமே ஆர்.கே.நகர் வீதிகளில் வந்து நின்றார்.
நிச்சயம் ஜெயித்துவிடுவோம்! என்கிற மிதப்பா அல்லது என்ன பண்ணினாலும் ஜெயிக்க மாட்டோம்! என்கிற வெறுப்பா என தெரியவில்லை. ஆனால் பிரச்சாரத்தில் அழுத்தமும், ஆழமும், விறுவிறுப்பும் காட்டவேயில்லை தி.மு.க.
ஆனால் அக்கட்சியின் வி.ஐ.பி.க்கள் இதை மறுக்கிறார்கள். “தளபதியின் மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் ஒட்டுமொத்த தொகுதியும் எங்கள் பக்கம் திரும்பி நின்றது. அரசு தரப்பில் களமிறங்கிய மதுசூதனனுக்கு அங்கே எந்த மவுசுமில்லை. ஆனால் தினகரனுக்கு துவக்கத்தில் கொஞ்சம் ஆதரவிருந்தது.
ஆனால் தளபதியின் பிரச்சாரம் அதை தவிடுபொடியாக்கி விட்டது. கடைசி நாள் பிரச்சாரத்தின்போது வைத்தியநாதான் பாலத்தில் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் குக்கருக்கு வாக்கு கேட்டு பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
இதில் சில பெண்கள் சட்டென்று எங்களுடன் இணைந்து உதயசூரியனுக்கு வாக்கு கேட்க துவங்கினர்.
அதோடு தளபதி ஸ்டாலினை பார்த்து ஃபிளையிங் கிஸ் கொடுத்தனர். எடப்பாடி - பன்னீர் அரசின் மீதிருக்கும் வெறுப்புதான் மக்களை இந்தளவுக்கு தளபதியை கொண்டாட வைத்திருக்கிறது.” என்று சொல்லியிருக்கிறார் செல்வ கணபதி.
யாருடிம்மா அது தளபதிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தது?!