ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரேமலதா விஜயகாந்தை, எங்கே எங்கள் கேப்டன், எங்கள் கேப்டன் வராமல் நீங்கள் ஏன் வருகிறீர்கள் என தொண்டர் கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரேமலதா விஜயகாந்தை, எங்கே எங்கள் கேப்டன், எங்கள் கேப்டன் வராமல் நீங்கள் ஏன் வருகிறீர்கள் என தொண்டர் கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தேமுதிக கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா துறையில் சாதித்ததை போல அரசியலிலும் அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தில் பெரிய அளவில் அவரால் அரசியலில் சோபிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 10 ஆண்டுகளாக தேமுதிக சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் அக்காட்சி தோல்வியை சந்தித்துள்ளன. விஜயகாந்தால் தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை இருந்து வரும் நிலையில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொருளாளர் பதவியை ஏற்று மாவட்ட செயலாளர்களை சந்திப்பது, கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வது என தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதில் இறந்த ஆறு பேர் இளம் பெண்கள், ஒருவர் சிறுமி ஆவார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சி பாளையத்தில் ஆற்றில் தடுப்பணையில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுய நினைவிழந்து உயிரிழந்தனர். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது உயிரிழந்த இளம்பெண்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமதலா விஜயகாந்த், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றில் மணல் அள்ள பட்டதால் அதிக பள்ளம் ஏற்பட்டுள்ளது, அந்தப் பள்ளத்தால்தான் அந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர். அந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும், அரசின் ஐந்து லட்ச ரூபாய் உதவி தொகை 10 லட்சமாக உயர்த்தி அந்த குடும்பத்திற்கு வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் இங்க பாருங்க என் கையை, கேப்டனின் பெயரை பச்சை குத்தி இருக்கிறேன், எங்கே எங்களது கேப்டன் எங்கே எங்களது கேப்டன், நீங்கள் ஏன் வருகிறீர்கள் என கண்ணீர் மல்க ஆதங்கம் தெரிவித்தார். எங்கள் கேப்டன் வராமல் நீங்கள் ஏன் வருகிறீர்கள் என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பிரேமலதா விஜயகாந்த் வாயடைத்து நின்றிருந்தார். தற்போது அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.