அமமுகவுக்கு பொதுச்சின்னம் எப்போது கிடைக்கும்..? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!
அமமுகவுக்கு பொதுச்சின்னம் எப்போது ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்புத் தெரிவித்துவிட்டதால், அமமுகவுக்கு பொதுச்ச்சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் சின்னம் ஒதுக்காத நிலையில் சின்னம் எப்போது ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த மக்களவை தேர்தலின் போது 1255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1601 வேட்பு மனுக்களும், இடைத்தேர்தலில் போட்டியிட 519 வேட்பு மனுக்களும் தமிழக தேர்தல் ஆணையத்தால் இதுவரை பெறப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 46.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது 113 கோடி ரூபாய் பிடிபட்டது.
அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகத்தான் கருதப்படுவார்கள். அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கவே தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அமமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சின்னம் ஒதுக்கப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.