எப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..? தமிழக அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்..!
தமிழக நிதிநிலைமை விரைவில் சீர்செய்யப்படும். அதன்பிறகு ரேஷன் கடைகள் மூலமாக குடும்பத் தலைவிக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விருது நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
“தமிழக நிதிநிலைமை விரைவில் சீர்செய்யப்படும். அதன்பிறகு ரேஷன் கடைகள் மூலமாக குடும்பத் தலைவிக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடந்துவருகிறது. தற்போதைய சூழலில் குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். தனி அறையில் குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் உட்கார வைக்க வேண்டாம். எப்போதும் வீட்டில் குழந்தைகளுக்கு தனிமையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்” என்று கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.