போலீஸுக்கு உதவும் ரெளடிகளின் வாட்ஸ் அப் குரூப்: அலுங்காமல், அசராமல் அதிரடி ஆபரேஷன்!
தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திலும், தளபதியின் ‘தெறி’ படத்திலும் வரும் காட்சிகள் போல் ரெளடிகள் கூடி குடித்து கும்மியடித்த கதை சென்னை மலையம்பாக்கத்தில் நடந்தேறியது. அதேபோல் சினிமாவில் வருவது போல் நிஜத்திலும் போலீஸ் அங்கே வந்து சுற்றி வளைத்து சுமார் எழுபத்து சொச்சம் ரவுடிகளை அமுக்கினர்.
தப்பித்த ரவுடிகளில் முக்கியமானவனும், கிரிமினல்களின் இந்த கூடல் நிகழ்வுக்கு காரணகர்த்தாவுமான பினுவை பற்றி பல்வேறு பகீர் தகவல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதில் கேரளத்தை சேர்ந்தவனான பினு, கண்ணூர் காசர்கோடு போன்ற கடல் புற மாவட்டங்களை சேர்ந்த கிரிமினல்களிடம் கத்தி வீசும் கலையை கற்றுக் கொண்டதாக ஒரு தகவல்.
மேலும், பினு சமீபத்தில் செய்த ஒரு ரெளடி ஆபரேஷன் மூலம் அவருக்கு ஒன்றரை கோடி பணம் கிடைத்ததாகவும், அந்த பணத்தில் தன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரெளடிகளுக்கு ஒன்றரை பவுன் செயின் போட்டதாகவும் தகவல்.
இந்த ரவுடிகள் பல மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்குள் தொடர்புகளில் இருப்பதற்காக வாட்ஸ் அப் குரூப்புகளையும் வைத்துள்ளார்களாம். பிடிபட்ட ரெளடிகளின் மொபைலை செக் பண்ணிய போலீஸ், இந்த வாட்ஸ் அப் குரூப்பிலுள்ள நபர்களையெல்லாம் அடுத்தடுத்து தூக்கிக் கொண்டிருக்கிறது.
ரெளடிகளின் வாட்ஸ் அப் குரூப் அவர்களுக்கு எந்த வகையில் பயன்பட்டதோ தெரியவில்லை. ஆனால் போலீஸுக்கு செமத்தியாக பயன்பட்டிருக்கிறது. ரெளடிகள் தங்களின் மொபைல் நம்பர் மற்றும் போட்டோவுடன் சிக்குவதால் போலீஸுக்கு இது சுகமான விசாரணையாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில் ரெளடி குரூப்பின் வாட்ஸ் அப் அட்மினை வாழ்த்துகிறது போலீஸ் பட்டாளம்.
அதெல்லாம் சரி, அந்த வாட்ஸ் அப் குரூப்போட ப்ரொஃபைல் பிக்சர் என்னவா இருக்கும்? பட்டா கத்தியா இல்ல ஏ.கே.47ஆ?...டவுட்டு!