போன வருஷம் நீங்க சொன்னதுதான்... மின் கட்டணத்தை ரத்து பண்ணுங்க... மு.க.ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்திய அன்புமணி!
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதால் இக்கால கட்டத்துக்கான மின் கட்டணத்தை ரத்துச் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் தமிழகத்தில் தீவிரமாகியுள்ளது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழுமையான ஊரடங்கால் மட்டுமே முடியும் என்று மருத்து வல்லுநர்களும், அரசு அதிகாரிகளும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத்தான் பாமக வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை. தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இதுதான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!
முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கைதான். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.