அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு புறக்கணிப்பதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். 

அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு புறக்கணிப்பதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ’’சட்டசபையில் சில கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கவில்லை. பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த வேளாண் விற்பனைக்குழு திரும்பப் பெறப்படும் என்று திமுக சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டுவர அனைத்தும் திட்டமிட்டு பணிகள் தொடங்கிய நிலையில் திமுக அரசு அதனை புறக்கணித்தது. அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு புறக்கணிக்கிறது. அதேபோல், சென்னை காமராஜர் சாலையில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தோம். திமுக அரசு அமைந்ததும் மாலை அணிவிக்க வைக்கப்பட்டிருந்த படிகளை அகற்றிவிட்டனர்.

'தாலிக்குத் தங்கம்' திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை, எளிய பெண்களுக்கு கிடைக்காமல் வழிவகை செய்திருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு சட்டசபையில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய பேச்சையும் அவைகுறிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள்’’எனத் தெரிவித்தார்.