மொட்டைக்கு காசு வாங்கினால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இந்து அறநிலைத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் கேட்கக் கூடாது எனவும் அப்படி கோரும் பணியாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளது.

மொட்டைக்கு காசு வாங்கினால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இந்து அறநிலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் கேட்கக் கூடாது எனவும் அப்படி கோரும் பணியாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் திமுக அரசின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. அதேபோல் இந்து அறிநிலையத்துறை மூலம் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக, தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தின் மூலம் அதற்கான பயிற்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது பல்வேறு தரப்பிலும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தற்போது வரை சுமார் 610 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மிக முக்கிய அதிரடி அறிவிப்பாக கோயில்களில் இனி இலவசமாக மொட்டை அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் இந்து சமய அறநிலைத்துறை அறிவித்தது. அதற்காக மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் தலா 5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தது.

இதை பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு சுற்றறிக்கையை ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மொட்டைக்கு காசு வாங்கினால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் மொட்டைக்கு இனி காசு இல்லை என்று திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் எவ்வித கட்டணமும் கேட்கக் கூடாது எனவும், அவ்வாறு கேட்கும் பணியாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும், இந்து சமய அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. எனவே இது குறித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.