தேர்தல் செலவுக்கு பணம் தரமாட்டோம்.. வேட்பாளர் தேர்வில் மநீம கறார்..? இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு..?
விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தேர்தலுக்கான செலவை கட்சி கொடுக்காது என்று திட்டவட்டமாக கூறிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ம.நீ.ம கட்சி சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ம.நீ.ம கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 21ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சித் தலைமை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. மார்ச் மாதம் 7ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையிலான வேட்பாளர் தேர்வு குழுவினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் நேர்காணல் நடத்தி வருகின்றனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தேர்தலுக்கான செலவை கட்சி கொடுக்காது என்று திட்டவட்டமாக கூறிவருவதாக தெரிகிறது. இந் நிலையில் பாமகவில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சியை தொடங்கிய ராஜேஸ்வரி பிரியா, மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் மய்யத்துடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், சிநேகா மோகன் தாஸ் - சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளர்., பத்மபிரியா - சுற்றுச்சூழல் அணி செயலாளர், பார்த்தசாரதி - சென்னை மண்டல விவசாய அணி செயலாளர், பால் ப்ரதீப் - சென்னை மண்டல் இளைஞர் அணி செயலாளர் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ம.நீ.ம கட்சியின் இளம் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் விருப்ப மனு அதிகளவில் தாக்கல் செய்துள்ளனர். எனவே வரும் தேர்தலில் ம.நீ.ம கட்சி சார்பில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.