இனி வரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்! தினகரன் சூளுரை!
புதிய அணியின் பெயரை வெளியிட்ட டிடிவி தினகரன், புதிய பெயருடனும், கொடியுடனும், இனி வரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சி ஆகியவற்றை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருவதாக கூறும் தினகரன், அதுவரை அரசியல் செய்வதற்கு தங்களது அணிக்கு அரசியல் ரீதியான அமைப்பு ஒன்று தேவை என்ற எண்ணத்தில், தனி அணி அமைக்க உள்ளதாக கூறி வந்தார்.
இது தொடர்பாக, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மூன்று கட்சி பெயர்களை வழங்கி, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறும் கோரினார். தினகரனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், மதுரை மேலூர் இன்று பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டினார். அப்போது தனது தலைமையிலான இயக்கத்தின் பெயரை தினகரன் அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் கொடியை போன்றே கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவே ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அப்போது பேசிய தினகரன், புதிய பெயருடனும் கொடியுடனும் இனிவரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதே வேளையில் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். அதுவரை குக்கர் சின்னத்தைப் பயன்படுத்துவோம் என்று கூறினார்.