விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை நடத்துவோம்... கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு கடிதம்..!
சிலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது எல்லாம், இந்த 3 ஜெப யாத்திரைகளின் விளைவுதான் என்று நாங்கள் நம்புகிறோம்.
கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஆனால், இந்த தடை அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட்16ம் தேதி , கிறிஸ்துவர்களுக்கு கோவை, செயின்ட் பால் கல்லுாரி தலைவர் டேவிட் கடிதம் அனுப்பி உள்ளார். அவை, கல்லூரி பெயருடன் பிட் நோட்டீஸ்களாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த நோட்டீஸில், ’’3ஆண்டுகளாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு ஜெபயாத்திரை நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று அல்லது அதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்பாக நம்முடைய வசதிக்கு ஏற்ப கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் சபையாக, குழுவாக அல்லது குடும்பமாக வாகனம் ஏற்பாடு செய்து, அதற்குள் அமர்ந்து கொண்டு, கோவையில் விக்கிரக வணக்கம் மாற ஜெபித்தோம். 2017 ம் ஆண்டு கோவையில் உள்ள அனைத்து சபை பிரிவுகளும் இணைந்து சுமார் 200 வாகனங்களில் ஆக.23ம் தேதி கோவையில் 100 வார்டுகளில் ஜெபித்தோம். 2018 செப்.,1ம் தேதி கோவையில் 100 வார்டுகளில் சுமார் 1,000 வாகனங்களில் அனைத்து சபை பிரிவு மக்களும் இதற்காக ஜெபித்தார்கள். 2019 செப்.,2 அன்றும் இதுபோல் ஜெபயாத்திரை நடைபெற்றது.
இப்படி 3 ஆண்டுகளாக கோவையில் ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்ட கலெக்டர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக்கூடாது என்றும் , சிலைகளின் அளவு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றும், 1 அல்லது 2 நாட்களில் கலெக்டர் குறிப்பிட்ட வழியாக சென்று அவர் குறிப்பிட்ட இடங்களில் சிலைகளை கரைத்து விட வேண்டும் என்றும் இன்னும் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு போட்டு உள்ளார். இதனால், சிலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது எல்லாம், இந்த 3 ஜெப யாத்திரைகளின் விளைவுதான் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உத்தரவினால் தற்போது விநாயகர் சதுர்த்தி நாட்களில் பிரச்னை ஏதும் வராமல் அமைதி நிலவுகிறது. ஆகவே, இந்த ஆண்டும் இதை சிறப்பாக நடத்தி உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் உத்தரவும் வேண்டும்.
இந்த ஆண்டு செப்.,10ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் செப்.,10ம் தேதியோ அல்லது 9 அல்லது 8 ம் தேதியோ அல்லது அவரவருக்கு வசதியான இன்னொரு நாளிலோ இந்த ஜெப யாத்திரையை உங்கள் சபைகளில் மிஷனரி பணித்தளங்களில் உள்ள போதகர்கள், மூப்பர்கள் மற்றும் விசுவாசிகளை உங்கள் மூலமாக பயன்படுத்தி நடத்த விரும்புகிறேன். கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்’’ என கூறப்பட்டு உள்ளது.
இது போன்ற ஜெபயாத்திரைகளை 2017 முதல் நடத்தப்படுவதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஜெபயாத்திரை நடத்தப்படுவதாக தெரிகிறது.