3 தொகுதிகளில் திமுகவை நேரடியாக தோற்கடித்துள்ளோம்.. கெத்து விடாமல் மார்தட்டும் எல்.முருகன்..
அம்மா உணவகம் என்பது பொதுச்சொத்து, அதைத் தாக்கிய திமுகவினரின் மீது முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
"3 தொகுதிகளில் திமுகவை நேரடியாக தோற்கடித்துள்ளோம் எனவும், பெரியார் மண்ணிலேயே பாஜக வெற்றி பெற்று விட்டது எனவும், பொதுச் சொத்தான அம்மா உணவகத்தை தாக்கியோர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.முருகன் வலியுறுத்திறார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜகவினரின் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சர்பில் எல். முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
50 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு, மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய வலியுறுத்தியும், மம்தா பானர்ஜிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல் .முருகன் " திரிணாமூல் காங். தாக்குதலால் மேற்கு வங்கத்தில் 9 பாஜகவினர் உயிரிழந்துள்ளனர், பெண்கள் மீது வன்புணர்வு சம்பவங்கள் நடந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 3 லிருந்து 77 ஆக பாஜக சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இந்த தேர்தலில் உயர்ந்துள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தொடர்ந்து, புதுவையில் பாஜக ஆட்சி அமைத்து விட்டது. பெரியார் ஈவெரா பிறந்த ஊரிலேயே பாஜக வென்றிருக்கிறது. 4 சட்டமன்ற உறுப்பினர்களை வென்று தமிழகத்தில் தாமரை மலராது என்று சொன்ன பலருக்கும் பதிலடி கொடுத்துள்ளோம்.
அம்மா உணவகம் என்பது பொதுச்சொத்து, அதைத் தாக்கிய திமுகவினரின் மீது முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆளுநர் மாற்றப்படக் கூடும் என்ற சமூக வலைதள தகவல்கள் தவறானவை. ஆளுங்கட்சி என்றால் ஒருமாதிரி , எதிர்கட்சி என்றால் ஒருமாதிரி என்று திமுக நடந்து கொள்ளும், அதனால்தான் தற்போது ஊரடங்கு உத்தரவில் கடைகளை விரைவாக அடைக்க வேண்டும் என கூறியுள்ளனர். பாஜக 3 தொகுதிகளில் திமுகவை நேரடியாக தோற்கடித்துள்ளோம். ஸ்டலின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் தேசியத் தலைமையிடம் ஆலோசித்து அதில் கலந்து கொள்வது குறித்து தமிழக பாஜகவினர் முடிவெடிப்போம் என்று கூறினார்.