இந்த கட்டிடங்களுக்கு தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கட்.. சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்.
அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு தண்ணீர் இணைப்பு, மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு தண்ணீர் இணைப்பு, மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை தடுக்க ஒவ்வொரு கிராம அளவில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களை கொண்டு குழு அமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இனி நீர்நிலைகளை ஆக்கிரமித்தோ அல்லது அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோ கட்டப்படும் கட்டிடங்களுக்கு தண்ணீர் இணைப்பு, மின்னிணைப்பு போன்றவை வழங்கப்பட மாட்டாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் வெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாறு கூவம் ஆறு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களை ஆக்கிரமித்து, அங்கு வசித்து வந்த 18,363 குடும்பங்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு மாற்று இடங்களில் வீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.