துணை பொது செயலாளர் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டமா? சி.ஆர். சரஸ்வதி காட்டம்!
மாணவி அனிதாவின் மரணத்துக்கு தமிழக அரசே காரணம் என்றும், அதிமுக துணை பொது செயலாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதமானது என்றும் டிடிவி ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி குற்றம் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுக பொது செயலாளர் சசிகலா நீக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுக்குழுகூட்டம் வரும் 12 ஆம் தேதி சென்னை, கோயம்பேடு அருகில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சசிகலாவை நீக்குவதாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், சி.ஆர். சரஸ்வதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக துணை பொது செயலாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டுவது செல்லாது என்று கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நீட் தொடர்பான போராட்டத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு தமிழக அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களின் நலனில் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் அக்கறையில்லை என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.