பொறுத்திருந்து பாருங்க.. ஆட்சி முடிவதற்குள் மின் மிகை மாநிலமாக தமிழகம்.. மார்தட்டும் செந்தில் பாலாஜி.
தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுரையின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு தினசரி வழங்கவேண்டிய நிலக்கரியையும் போதிய அளவு வழங்கவில்லை. தமிழகத்தில் இதனால் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மிகை மின் மாநிலமாக இருக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனை மக்களால் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை , தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு என்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தலைமைக் கழக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் சேவை மையம், மின்கம்பம் , மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- கோடைக்காலம் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போது இதே போன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுரையின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு தினசரி வழங்கவேண்டிய நிலக்கரியையும் போதிய அளவு வழங்கவில்லை. தமிழகத்தில் இதனால் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அடிப்படையில் நிலக்கரி பெறப்படும் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு தொழிற்சாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் நடவடிக்கைகளால் அது போன்ற நிலை இங்கு இல்லை. தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 சதவீதம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு காலம் ஆட்சி முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மிகைமின் மாநிலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.