அடிதூள்.. நாட்டிலேயே முதல் முறையாக, நாளை முதல் தமிழகத்தில் மட்டும்.. தட்டி தூக்கிய ஸ்டாலின்.
இதுவரை மத்திய அரசிடமிருந்து 2.1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.97 கோடி தடுப்பூசிகள் இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கு இதுவரை 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 14.22 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு கட்டண அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்கான திட்டத்தை நாளை சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் துவங்க உள்ளார். கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வந்த நிலையில், பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு தவணை முறையில் தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்கி வருகிறது, இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது அலை உருவாகக்கூடும் என்பதால் படுவேகமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பெருநிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பின் மூலம் தமிழக சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக நாளை துவங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார். சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நாளை முதல் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதுவரை மத்திய அரசிடமிருந்து 2.1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.97 கோடி தடுப்பூசிகள் இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கு இதுவரை 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 14.22 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு கட்டண அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது. இலவச தடுப்பூசி திட்டத்திற்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 98% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதில் 70 சதவீத தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள. எனவே தனியார் மருத்துவமனைகளில் மீதமுள்ள தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக விரைந்து செலுத்திட இத்திட்டம் பயன்பெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.